விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டுமே தவிர தடை விதிக்க கூடாது – தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
மதுக்கடைகளை திறக்க காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்படும் நிலையில், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை விதிப்பது ஏற்புடையதல்ல என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
புதுச்சேரி பாஜக தலைமை அலுவலத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
புதுச்சேரியில் கடந்த கால காங்கிரஸ் ஆட்சியில் முதல்வராக இருந்த நாராயணசாமி எந்த திட்டத்தையும் நிறைவேற்றாமல் மத்திய அரசையே குற்றம் சாட்டி வந்ததார். புதுச்சேரியில் தற்போது பாஜக மிகப்பெரிய எழுச்சியை பெற்றுள்ளது என தெரிவித்தார்.
இதுகுறித்து தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் முடிவை பாஜக வரவேற்கிறது. ஆனால் விநாயகர் சதுர்த்தி பேரணிக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்திருப்பது ஏற்புடையதல்ல என்றும் மதுக்கடைகளுக்கு காவல் துறை பாதுகாப்பு அளிக்கும் தமிழ்நாடு அரசு, விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டுமே தவிர தடை விதிக்க கூடாது என்றும் தெரிவித்தார்.
கே.டி.ராகவன் விவகாரத்தில் ஏற்கனவே குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த குழு இந்த விவகாரம் தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவித்தார்.
