விளையாட்டு போட்டிகளில் இந்திய இளைஞர்கள் பெரிய அளவில் சாதிக்க விரும்புகிறார்கள் – பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மன்கி பாத் (மனதின் குரல்) என்ற நிகழ்ச்சியின் மூலம் அகில இந்திய வானொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.
கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றதில் இருந்து அவர் மன்கி பாத் மூலம் பேசி வருகிறார். அவரது 80-வது மன்கி பாத் உரை நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது:-
இளைஞர்கள் புதிய பாதையை உருவாக்க நினைக்கின்றனர். லட்சியத்தை நோக்கி பயணிக்கின்றனர். இன்றைய இளைஞர்கள் விளையாட்டு போட்டிகளின் மீது ஆர்வமாக உள்ளனர். பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் விளையாட்டில் முன்னேறும்போது மகிழ்ச்சி அடைகிறார்கள்.
கிராமங்கள்தோறும் விளையாட்டு போட்டிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும். அனைவரும் பங்கேற்பதன் மூலம் தான் இந்தியா விளையாட்டு போட்டிகளில் உயர்ந்த நிலையை எட்ட முடியும்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஆக்கி அணிக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.
ஒவ்வொரு பதக்கமும் சிறப்பானது. ஆக்கியில் இந்தியா பதக்கம் வென்ற போது நாடே மகிழ்ச்சி அடைந்தது. அன்று மேஜர் தயான்சந்த் மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருப்பார். இந்திய இளைஞர்கள் பெரிய அளவில் சாதிக்க விரும்புகிறார்கள்.
பாராலிம்பிக் போட்டியில் இந்தியா உற்சாகமாக பங்கேற்றுள்ளது. இந்தியா முழுவதும் விளையாட்டுகள் புதுப்பிக்கப்பட வேண்டும்.
இந்திய கலாச்சாரம் மற்றும் ஆன்மிகம் உலகளவில் பிரபலமடைந்து வருகிறது. தூய்மையான நகரம் என்ற பட்டத்தை தொடர்ச்சியாக கைப்பற்றிய பிறகு இந்தூர் தற்போது இந்தியாவின் முதல் ‘வாட்டர் பிளஸ்’ நகரமாக மாறி உள்ளது.
இந்தியாவின் விண்வெளித்துறை சீர்திருத்தங்கள் இளைஞர்களின் கற்பனையை கவர்ந்துள்ளது. அவர்கள் தரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
இந்தியாவில் பல்வேறு பிராந்தியங்களில் சிறப்பான பொம்மைகளை உருவாக்கும் கலைஞர்கள் உள்ளனர். உலக சந்தைகளில் பொம்மைகளை அதிகளவில் ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா உருவாகலாம்.
நாட்டில் 62 கோடிக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் தொடர்ந்து கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
