1 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்…
நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதியின் 3-வது ஆண்டு நினைவுநாள் இன்று தமிழ்நாடு முழுவதும், திமுகவினரால் அனுசரிக்கப்பட்டு வருகிறது. கடற்கரையில் உள்ள மு.கருணாநிதி நினைவிடத்தில், மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள், மலர் தூவி மரியாதை செய்தனர்.

மு.கருணாநிதியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தின் முன்பு வைக்கப்பட்டிருந்த உருவப்படத்துக்கு முதலமைச்சர் அஞ்சலி செலுத்தினார். இதைத் தொடர்ந்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்துக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதன் பின்னர், அண்ணா அறிவாலயம் சென்ற முதலமைச்சர், கருணாநிதியின் சிலைக்குகீழ் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். திமுக தொண்டர்கள் அவரவர் வீட்டில் இருந்தே மரியாதை செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டதன் பேரில், திமுகவினர் தங்கள் இல்லம் முன்பு மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதியின் உருவப்படத்தைவைத்து, அலங்கரித்து மரியாதை செய்து வருகின்றனர்.
