விளையாட்டு

ஐபிஎல் தொடர் குறித்த பிசிசிஐயின் முடிவை பாராட்டிய ரோகித் ஷர்மா!

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரை ஒத்தி வைத்துள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம். இந்நிலையில், பிசிசிஐயின் முடிவை பாராட்டி உள்ளார் மும்பை அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா. பயோ பபுளில் இருந்த கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து நடப்பு ஐபிஎல் தொடர் மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து மும்பை அணி வெளியிட்டுள்ள விழிப்புணர்வு வீடியோ மூலம் ரோகித் இதனை தெரிவித்துள்ளார்.

“எதிர்பாராத விதமாக ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நமது நாட்டில் தற்போது நிலவி வரும் அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு பார்த்தால் தொடரை ஒத்திவைப்பதாக அறிவித்த பிசிசிஐயின் முடிவு நல்லதொரு முடிவு என சொல்லலாம். அரசு சொன்ன விதிகளை பின்பற்றி கொரோனாவை விரட்டி அடிப்போம்” என ரோகித் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.