கேரளாவிற்கு 1000 டன் ஆக்சிஜன், 75 லட்சம் டோஸ் தடுப்பூசி வேண்டும் – பிரதமர் மோடிக்கு பினராயி விஜயன் கடிதம்
கேரளாவிற்கு 1000 டன் ஆக்சிஜன் மற்றும் 75 லட்சம் டோஸ் தடுப்பூசி அனுமதிக்கப்பட வேண்டும் என பிரதமர் மோடி அவர்களுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்
கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன்,பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இறக்குமதி செய்யப்பட்ட 1000 டன் ஆக்சிஜனை கேரளாவுக்கு வழங்குமாறு வெளியுறவு அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது என்றும், இந்த சூழ்நிலையில், போதுமான இருப்புக்களை உருவாக்க மத்திய அரசின் உதவி தேவை என்றும் பினராயி விஜயன் கூறியுள்ளார். மேலும் கேரளாவுக்கு அருகிலுள்ள ஏதேனும் ஒரு ஆக்ஸிஜன் ஆலையிலிருந்து 500 டன் ஒதுக்கீடு செய்வதையும் மத்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து இரண்டாவது டோஸ் ஊசிக்காக காத்திருப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் 50 லட்சம் டோஸ் கோவிட்ஷீல்டு தடுப்பூசிகளும் 25 லட்சம் டோஸ் கோவேக்சின் தடுப்பூசிகளும் வழங்கப்பட வேண்டும் என்றும் பினராயி விஜயன் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்,.
