வரும் காலங்களில் டெல்டா வைரஸ் அதிக வேகமாக பரவும்… உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை…
இனி வரும் மாதங்களில் உலக நாடுகளில் டெல்டா வகை கொரோனாவின் பாதிப்பு அதிகரிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று, இந்தியா, அமெரிக்க, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடிவிட்டது. கொரோனா தாக்கத்தால் உலகில் பல லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் உருமாறிய டெல்டா வைரஸ் தற்போது உலக நாடுகளில் பரவி வருகிறது. 96 நாடுகளில் உருமாறிய டெல்டா வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. பல நாடுகளில் டெல்டா வகை வைரஸ் பாதிப்பு உள்ள நிலையில் அவை இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், உலக சுகாதார அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இதுவரை கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ்களில், டெல்டா வகை வைரஸ் அதிவேகமாக பரவும் அபாயம் உள்ளதாகவும், இது தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத மக்களிடையே வேகமாக பரவி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
டெல்டா வைரஸ் பரவல் காணப்படும் நாடுகளில், தொற்று பாதிப்பு உயர்ந்து வருகிறது என்றும், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதும் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. உருமாறிய டெல்டா வைரஸ், அதி வேகமாக உருமாற்றம் அடைந்து வரும் மாதங்களில் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
